யேகோவா ரோஹி
Jehovah Rohi
பொருள்: கர்த்தரே என் மேய்ப்பர்
God is my shepherd
சங்கீதம் 23-ஆம் அதிகாரம் மிகவும் மனப்பாடம் செய்யப்பட்ட மற்றும் பல கிறிஸ்தவர்களின் பிரியமான வேதப்பகுதியாகும். இந்தப் பாடலை எழுதிய தாவீது ஒரு மேய்ப்பன். ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளை கவனித்துக்கொள்வது போல் தேவன் தன் மக்களை கவனித்துக்கொள்கிறார். உணவு, தங்குமிடம் மற்றும் தலைமைத்துவத்திற்காக ஆடுகள் தங்கள் மேய்ப்பனை முழுமையாகச் சார்ந்துள்ளது போல, எல்லாவற்றுக்கும் தேவனை நாம் சார்ந்திருக்க வேண்டும்.
4-ஆம் வசனத்தில், தாவீது "உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்" என்று பாடுகிறார். இந்த கோலும் தடியும், நம்மீதுள்ள தேவனுடைய பாதுகாப்பை அடையாளப்படுத்துகிறன. மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளைத் தாக்க முயற்சிக்கும் மிருகங்களை எதிர்த்துப் போராட பயன்படுத்துவார்கள். நல்ல மேய்ப்பராகிய இயேசு, நம்மைப் பாதுகாக்க சாத்தானை எதிர்த்து ஜெயித்தார்.
ஆடுகளை எண்ணி, அவற்றை சரியான பாதையில் வழிநடத்த கோலைப் பயன்படுத்துகிறார்கள். இது வேறு எந்த கால்நடைகளுக்கும் பொருந்தாது. இந்த கோலும் தடியும் நம்மைச் சரிசெய்து தினமும் நம்மை வழிநடத்தும் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கும்.
சபையிலிருந்து நாம் வழிதவறி, பின்வாங்கி போனாலும், ஒரு நல்ல மேய்ப்பன் 99 ஆடுகளை விட்டுவிட்டு 1 ஆட்டுக்குட்டியைத் தேடிவருவதுபோல், கர்த்தர் நம்மைத் தேடி வருவார். எதிர்காலத்தைப் பற்றி நாம் பயப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை. நம் வாழ்க்கை அவர் கைகளில் உள்ளது.
[Strong's number:
7462. ra'ah: to pasture, tend, graze]