Tuesday, August 27, 2024

யேகோவா ரோஹி

யேகோவா ரோஹி

Jehovah Rohi
பொருள்: கர்த்தரே என் மேய்ப்பர்
God is my shepherd
சங்கீதம் 23-ஆம் அதிகாரம் மிகவும் மனப்பாடம் செய்யப்பட்ட மற்றும் பல கிறிஸ்தவர்களின் பிரியமான வேதப்பகுதியாகும். இந்தப் பாடலை எழுதிய தாவீது ஒரு மேய்ப்பன். ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளை கவனித்துக்கொள்வது போல் தேவன் தன் மக்களை கவனித்துக்கொள்கிறார். உணவு, தங்குமிடம் மற்றும் தலைமைத்துவத்திற்காக ஆடுகள் தங்கள் மேய்ப்பனை முழுமையாகச் சார்ந்துள்ளது போல, எல்லாவற்றுக்கும் தேவனை நாம் சார்ந்திருக்க வேண்டும்.
4-ஆம் வசனத்தில், தாவீது "உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்" என்று பாடுகிறார். இந்த கோலும் தடியும், நம்மீதுள்ள தேவனுடைய பாதுகாப்பை அடையாளப்படுத்துகிறன. மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளைத் தாக்க முயற்சிக்கும் மிருகங்களை எதிர்த்துப் போராட பயன்படுத்துவார்கள். நல்ல மேய்ப்பராகிய இயேசு, நம்மைப் பாதுகாக்க சாத்தானை எதிர்த்து ஜெயித்தார்.
ஆடுகளை எண்ணி, அவற்றை சரியான பாதையில் வழிநடத்த கோலைப் பயன்படுத்துகிறார்கள். இது வேறு எந்த கால்நடைகளுக்கும் பொருந்தாது. இந்த கோலும் தடியும் நம்மைச் சரிசெய்து தினமும் நம்மை வழிநடத்தும் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கும்.
சபையிலிருந்து நாம் வழிதவறி, பின்வாங்கி போனாலும், ஒரு நல்ல மேய்ப்பன் 99 ஆடுகளை விட்டுவிட்டு 1 ஆட்டுக்குட்டியைத் தேடிவருவதுபோல், கர்த்தர் நம்மைத் தேடி வருவார். எதிர்காலத்தைப் பற்றி நாம் பயப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை. நம் வாழ்க்கை அவர் கைகளில் உள்ளது.
[Strong's number:
7462. ra'ah: to pasture, tend, graze]

யேகோவா நிசி

யேகோவா நிசி

Jehovah Nissi
பொருள்: கர்த்தரே நம் ஜெயக்கொடி
God is our Banner
"மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி..." என்று பேரிட்டார். (யாத் 17:15)
இஸ்ரவேலர்கள் வனாந்தர யாத்திரையில் தேவனுக்குள்ளாக வளர்ந்ததால், அவ்வப்போது அவர்கள் அவரை அழைத்த பெயர்களும் மாறின. யாத்திராகமம் 17-இல் இஸ்ரவேலர்கள் அமலேக்கியர்களால் தாக்கப்பட்டனர். மோசே தனது கோலை உயர்த்தும் போதெல்லாம் இஸ்ரவேல் வீரர்கள் மேற்க்கொண்டனர், இறக்கும் போதெல்லாம் அவர்கள் தோற்றனர். யோசுவா அமலேக்கியருடன் போரிட்டு வெற்றி பெறும்வரை ஆரோனும் ஊரும் மோசேவின் கைகளை தாங்கி உயர்த்தினர். போரில் வெற்றி பெற்ற பிறகு, மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி அதை "யேகோவா நிசி" என்று அழைத்தார். தேவன் தம்முடைய ஜனங்களுடன் வாசம்பண்ணுகிறாரென்பதை மற்றவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று மோசே விரும்பினார்.
இஸ்ரவேல் வென்றது இராணுவ வீரர்களாலோ அல்லது போர் திட்டங்களாலோ இல்லை; அவர்கள் தேவனுடைய வல்லமையால் வென்றனர். இஸ்ரவேல் கர்த்தருடைய பாதுகாப்பின் கீழ் இருந்தது, அவருடைய உதவியால் இஸ்ரவேலர்கள் போரிட்டனர், அவருடைய நாமத்தினாலும் பலத்தினாலும் அவர்கள் வெற்றி பெற்றனர்.
'நிசி' என்ற எபிரேய வார்த்தை NES என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதன் பொருள் "கொடி/அடையாளம்" ஆகும்.
கிறிஸ்தவர்களாகிய நாமும் நமது வாழ்வில் கர்த்தரின் கொடியை ஏந்துபவர்களாய் வாழவேண்டும். நம்முடைய சூழ்நிலைகள் எவ்வளவுதான் கடினமாகத் தோன்றினாலும் தேவன் நம் மத்தியில் வாசம்பண்ணுகிறார்.
"தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்."
1 யோவான் 5:4
[Strong's Hebrew:
5251. nes: a standard, ensign, signal, sign]

யேகோவா நாகாட்

யேகோவா நாகாட்

Jehovah Nagad
பொருள்: எதிர்காலத்தை முன்னறிவிக்கும் தேவன்
God who predicts the future
"பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின, புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன், அவைகள் தோன்றாததற்குமுன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்."
ஏசாயா 42:9
தீர்க்கதரிசனங்கள் மூலம் எதிர்காலத்தை முன்னறிவிக்கும் "தீர்க்கதரிசிகள்" பலரை வேதாகமத்தில் கண்டுள்ளோம். நோஸ்ட்ராடாமஸ், பாபா வாங்கா போன்ற பல பிரபலமானவர்களை உலகம் அறியும். சவுல் சந்தித்த எந்தோரின் அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீயைப் போன்ற தீயவர்களும் உள்ளனர்.
நிச்சயமற்ற இவ்வுலகில், பலர் ஜோதிடர்களைத் தேடுகிறார்கள், ஆர்வமாக தங்கள் தினசரி ஜாதகத்தைப் படிக்கிறார்கள், அதை நம் தேவன் முற்றிலும் வெறுக்கிறார்!!!
எல்லா ஜோசியர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் நட்சத்திரம் பார்க்கிறவர்களும் எரிக்கப்படுவார்கள் என்றும், தேவனுடைய கோபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்றும் ஏசாயா 47:13-15 தெளிவாகக் கூறுகிறது. வேதாகமத்திலிருந்து, ஜோதிடம் பாபிலோனிலிருந்து (கல்தேயர்கள்) உருவானது என்பதை உறுதிப்படுத்த முடியும், எனவே இது பாகால் கலாச்சாரத்தோடு சம்பந்தப்பட்டதாகும்.
எல்லா ஆவியையும் நம்ப வேண்டாம், கிறிஸ்தவத்தில் கூட பல தவறான ஆவிகள் இருப்பதால் அவற்றைச் சோதித்து அறியவும் தேவன் நம்மை எச்சரிக்கிறார். நாம் தேவனை நேசித்தால் எல்லாம் நமக்கு சாதகமாக நடக்கும் என்பதை கிறிஸ்தவர்களாகிய நாம் விசுவாசிக்க வேண்டும்.
எதிர்காலத்தைப் பற்றிய பயம் நமக்கு இருக்க வேண்டாம். எப்போது, எங்கு, என்ன நடக்கும் என்பது தேவனுக்கு மட்டுமே தெரியும் என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை. "என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்" என்று தேவன் எரேமியா 33:3-இல் கூறுகிறார்.
"நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே."
- எரேமியா 29:11
[Strong's Hebrew:
5046. nagad: to make known, to demonstrate or to sensitize]

யேகோவா நேரி

யேகோவா நேரி

Jehovah Neri
பொருள்: கர்த்தரே என் விளக்கு
The Lord is my lamp
இன்று பலர் “என் எதிர்காலம் இருளாகிவிட்டது. என் தொழில் இருண்டு கிடக்கிறது. எனது ஊழியத்தில் ஒளி இல்லை. எனது திருமண வாழ்க்கையில் எந்த பிரகாசத்தையும் என்னால் பார்க்க முடியவில்லை. என் வாழ்க்கையில் ஒளியே இல்லை” என்று கூறுகிறார்கள். வெளிச்சத்திற்காக ஏங்குகிறவர்களுக்கு தேவன் நம்பிக்கை அளிக்கும் விதமாக 2 சாமுவேல் 22:29-இல்: “கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர். கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்" என்று எழுதுகிறார்.
ஒளி நன்மையைக் குறிக்கிறது. தேவனுடைய விளக்கு நம் உலகத்தை பிரகாசமாக்குகிறது. கர்த்தரின் கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி. இந்த இருளான உலகில் அவைகள் நம்மை சரியான பாதையில் வழிநடத்தும்.
"உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது."
சங்கீதம் 119:105
கர்த்தரைப் பார்த்தவர்களின் முகங்கள் அனைத்தும் பிரகாசமடைவதாக வேதாகமம் கூறுகிறது. இன்று முதல், மனிதர்களின் முகத்தைப் பார்க்காமல், தேவனுடைய முகத்தை நோக்கிப் பாருங்கள்.
"தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை..."
1 யோ 1:5
யோவான் 3:19-21 இல், சத்தியத்தை விரும்பும் அனைவரும் வெளிச்சத்திற்கு வருவார்கள் என்றும், பொல்லாதவர்கள் இருளை விரும்புகிறார்கள் என்றும் கூறுகிறது. இந்த வெளிச்சம் இயேசுவைக் குறிக்கிறது; இருள் உலகத்தின் இச்சைகளைக் குறிக்கிறது. இருள் மறைத்து மூடுகிறது, ஒளி உண்மையை வெளிப்படுத்துகிறது. ஒளியை அனைவராலும் பார்க்க முடியும். ஒளி சக்தி வாய்ந்தது மற்றும் தொலைநோக்குடையது, எல்லாவற்றையும் ஒளிரச் செய்யும் திறன் கொண்டது. நாம் தேவனைத் தேடும்போது, அவரைக் கண்டடைவோம். நம் அன்றாட வாழ்வில் சத்தியத்தைக் கண்டடைவதற்கு அவர் உதவுவார். கிறிஸ்துவினாலும், பரிசுத்த ஆவியின் வல்லமையாலும், நாம் தினமும் வாழ்க்கையின் வெளிச்சத்தில் நடக்கிறோம். அவருடைய ஒளி நமக்கு ஞானத்தைத் தருகிறது.
"அஸதோ மா ஸத்கமய"
அவருடைய வார்த்தை மட்டுமே நம்மை இருளில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்!
Strong's Hebrew:
5216. ner - a lamp
4501. menorah - lampstand
(Neri, Neriah are Biblical names signifying lamp, light of God)

யேகோவா மிஷான்

யேகோவா மிஷான்

Jehovah Misan
பொருள்: கர்த்தரே என் ஆதரவு / துணை
God is my support
"என் ஆபத்து நாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள். கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்."
- 2 சாமுவேல் 22:19
யாத்திராகமம் 17:12 இல், ஆரோனும் ஊரும் சோர்வடைந்த மோசேயை ஒரு கல்லின்மேல் உட்காரவைத்து, அசந்துபோன அவரது கைகளை சாயங்காலம் வரை உயர்த்தி தாங்கினதாகப் படிக்கிறோம்.
வாழ்க்கை கடினமாக இருக்கும்போது நம் அனைவருக்கும் இப்படிப்பட்ட ஆதரவு தேவை. இந்த சம்பவத்தில், ஆரோனும் ஊரும் மோசேக்கு ஆதரவாக இருந்ததை நாம் காணலாம். அவர்கள் மோசே மக்களை வழிநடத்தும் விதத்தைப் பார்த்துக்கொண்டு மட்டும் இருக்கவில்லை, மாறாக அவர்கள் அவரை ஆதரிப்பதன் மூலம் தலைமைப் பொறுப்பில் பங்கேற்றனர்.
நல்ல நண்பர்களைக் கண்டுபிடிப்பது இந்த சுயநலமான உலகில் மிகவும் கடினமான காரியம். எல்லோரும் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு கொண்டிருக்கிறார்கள், வேறொரு நபரை ஆதரிக்கவோ அல்லது வெற்றிபெற உதவவோ பெரும்பாலும் யாருக்கும் நேரமில்லை.
எனவே, உங்கள் நண்பர்கள் வட்டாரத்தின் எண்ணிக்கையை விட தரத்தில் கவனமாக இருப்பது முக்கியம். நூறு போலியான நண்பர்களைக் காட்டிலும் உங்களை நேசிக்கும் நான்கு உண்மையான நண்பர்கள் இருப்பது நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவை உங்கள் சிறந்த நண்பராக ஆக்குங்கள் - நம்மை படைத்தவரை விட அதிகமாக யாராலும் நம்மேல் உண்மையிலேயே அக்கறை காட்ட முடியாது.
"கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்."
சங்கீதம் 55:22
4937. mish'en - a support, staff

யேகோவா மிஸ்காப்

யேகோவா மிஸ்காப்

Jehovah Misgab
பொருள்: தேவன் என் உயர்ந்த அடைக்கலம்
"God is my High Tower"
எபிரேய வார்த்தையான "மிஸ்காப்" என்றால் பாதுகாப்பு, அடைக்கலம், கோட்டை, உயரமான இடம் அல்லது தங்குமிடம் என்று பொருள். நீதிமொழிகள் 18:10 - ல், "கர்த்தரின் நாமம் பலத்த துருகம்: நீதிமான் அதற்குள் ஓடிச்சுகமாயிருப்பான்" என்று வாசிக்கிறோம்.
பண்டைய நாட்களில், எரிகோ நகரத்தைப்போல தங்கள் நகரத்தை சுற்றி ஒரு பெரிய மதிலைக் கட்டி பாதுகாப்பதற்குப் பதிலாக, சில சிறிய நகரங்களில் உயரமான கோபுரத்தைக் கட்டினார்கள். இதற்குள் நகரத்தின் மக்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான உணவு, தண்ணீர், உடைகள் போன்ற அனைத்து பொருட்களும் இருக்கும் - வெள்ளம் அல்லது போர் போன்ற அவசர காலங்களில், மக்கள் பாதுகாப்பாக இருக்க இந்த கோபுரத்தை நோக்கி ஓடுவார்கள். (நியா 9:51)
கர்த்தருடைய அடைக்கலம் சாதாரண அடைக்கலம் அல்ல. அது, உயர்ந்த அடைக்கலம். "இயேசுவின் இரத்தமே" அந்த உயர்ந்த அடைக்கலம். அது, எந்த சாத்தானாலும் எட்டிப்பிடிக்க முடியாத அடைக்கலம். எந்த சங்கார தூதனாலும் நம்மைத் தொடவோ, அணுகவோ முடியாது. நம் படிப்போ, தாலந்தோ, திறமைகளோ, செல்வாக்கோ நமக்கு அடைக்கலம் தரப்போவதில்லை. கர்த்தர் ஒருவரே, நம்மை உயர்ந்த அடைக்கலத்தில் வைத்து, பாதுகாக்கிறவர்.
"என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்" (சங். 91:14).
[Strong's Hebrew:
4869. misgab - a secure height, retreat, stronghold]

யேகோவா மெஃபால்டி

யேகோவா மெஃபால்டி / பாலாட்

Jehovah Mephalti
பொருள்: "கர்த்தரே என்னை விடுவிக்கிறவர்"
God is my deliverer
வேதாகமம் விடுதலைப் பற்றிய கதைகளால் நிறைந்துள்ளது. எகிப்தியர்களிடமிருந்து இஸ்ரவேலை விடுவிக்க மோசேயையும், பெலிஸ்தியர்களிடமிருந்து விடுவிக்க சிம்சோனையும், மீதியானியர்களிடமிருந்து விடுவிக்க கிதியோனையும், மோவாபியர்களிடமிருந்து விடுவிக்க ஏகூத்தையும், யூதர்களைக் கொல்லும்படி வகைத்தேடின ஆமானின் திட்டத்திலிருந்து விடுவிக்க எஸ்தரையும் மற்றும் பலரையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தினார். அவர் மீனின் வயிற்றிலிருந்து யோனாவையும், சிங்கத்தின் குகையிலிருந்து தானியேலையும், சவுலிடமிருந்து தாவீதையும், எரிகிற அக்கினிச்சூளையில் இருந்து சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவையும் விடுவித்தார். நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.
"நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார், தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர், என் தேவனே, தாமதியாதேயும்."
சங்கீதம் 40:17
மனிதன் பாவத்தில் விழுந்த நேரத்திலிருந்தே, சிலுவை மூலமாக நம்மை விடுவிக்க தேவன் ஒரு திட்டத்தை வைத்திருந்தார். அவர் நம் எதிரிகளிடமிருந்து நம்மை விடுவித்து, வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்திற்கு நம்மை அழைத்துச் செல்வார். இன்று, நாம் பெருமை, பேராசை, கோபம், பொறாமை, காமம்,பெருந்தீனி, சோம்பல் போன்ற பாவங்களில் சிக்கிக்கொண்டிருக்கலாம், கவலைகளுக்கு அடிமையாக இருக்கலாம். ஆனால், நாம் மனம்திரும்பி தேவனை நோக்கி உண்மையாக அழைத்தால், அவர் நம்மை எந்த நேரத்திலும் விடுவிக்க வல்லவராக இருக்கிறார்.
"கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்."
- சங்கீதம் 72:12
Strong's
6403. palat
ū·mə·p̄al·ṭî

யேகோவா மெனாட் கெல்கி

யேகோவா மெனாட் கெல்கி

Jehovah Menat Khelqi
பொருள்: கர்த்தர் என் பங்கும் என் சுதந்தரமானவர்
The Lord is my portion and my inheritance
"பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம், இஸ்ரவேல் புத்திரர் நடுவில் நானே உன் பங்கும் உன் சுதந்தரமுமாய் இருக்கிறேன்."
- எண்ணாகமம் 18:20
“பங்கு” என்பது பிரிக்கப்பட்ட ஒன்றின் ஒரு பகுதி; “சுதந்தரம்” என்பது இஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்திற்குள் நுழைந்தபோது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தைக் குறிக்கிறது. ஒவ்வொரு குடும்பமும் தேவனிடமிருந்தே தங்கள் நிலத்தைப் பெற்றார்கள், எனவே அதை மிகவும் முக்கியமானதாகக் கருதினர். அவர்கள் அதை தங்கள் குழந்தைகளுக்கும், தங்கள் குழந்தைகளின் குழந்தைகளுக்கும் கொடுத்தார்கள். லேவி கோத்திரத்தைத் தவிர, மற்ற எல்லா கோத்திரங்களும் தங்கள் நிலத்தைப் பெற்றன, ஏனென்றால் தேவனே அவர்களுடைய பங்கும் சுதந்தரமுமானார். பிந்தைய நாட்களில், இஸ்ரவேல் ஜனம் தங்களுக்குச் சொந்தமான நிலமோ அல்லது சொத்தோ அவர்களின் சுதந்தரம் அல்ல, தேவனே நிரந்தரமான சுதந்தரம் என்பதை அறிந்துக்கொண்டனர்.
"கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர், என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்."
சங்கீதம் 16:5
தாவீது பூமிக்குரிய சுதந்தரத்திற்கு அப்பால் தனது சுதந்தரமாக நித்திய தேவனை பார்க்கிறார்.
புதிய ஏற்பாட்டில், நிதர்சனமாக இயேசுவே அனைத்து விசுவாசிகளின் சுதந்தரமாகிறார். அவர் யூதர்களுக்கு மட்டுமல்ல, புறஜாதிகளுக்கும் சொந்தமானவர். இயேசுவே நம்மை விட்டு எடுபடாத நல்லப்பங்கு. ஐசுவரியம், மரியாதை, புகழ், நண்பர்கள் – இவை எதுவும் தேவனுக்கு ஈடாகாது.
[Strong's Hebrew:
2506. cheleq - portion
4490. manah - portion
5159. nachalah - inheritance]

யேகோவா ஹாக்காக்

யேகோவா ஹாக்காக்

[Jehovah Chaqaq]
பொருள்: கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர்
[God is our Law-giver]
"கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்."
ஏசாயா 33:22
தேவன் மனிதனை படைக்கும்போது தனது சாயலாகப் படைத்தார். மோசேக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கடப்படுவதற்கு முன்பே ஏனோக்கு, நோவா, ஆபிரகாம் போன்ற சில மனிதர்கள் தேவனுடன் நடந்ததை நாம் காணலாம். ஒரு நண்பனுடன் பேசுவதைப் போல இவர்கள் தேவனோடு உறவாடியதால், அவருக்கு கட்டுப்பட்டு மனசாட்சியுடன் வாழ்ந்தார்கள்.
பறவைகள், விலங்குகள், தேவ தூதர்கள் உட்பட - அவரது அனைத்து படைப்புகளுக்கும் தேவன் அடிப்படை சட்டமியற்றுபவர் என்பதை யோபு, சங்கீதம் போன்ற புத்தகங்கள் உறுதிப்படுத்துகின்றன. மனிதனும், தேவனுடைய படைப்பாக இருப்பதால், அவனும் தேவனுடைய கட்டளைகளுக்கு உட்பட்டவன்.
பழைய ஏற்பாட்டில் மொத்தம் 613 கட்டளைகள் உள்ளன - அந்த விதிகளை முழுவதும் எந்த மனிதனாலும் எளிதாகக் கடைப்படிக்க முடியாது. 10 கட்டளைகளைப் பின்பற்றுவது கூட கடினம். தேவனைப் பிரியப்படுத்துவதை விட சுய ஆசைகளை நிறைவேற்றவே நம் இதயங்கள் பெரும்பாலும் முனைகின்றன.
அதனால்தான் இயேசு வரும்வரை பாவமற்ற மனிதன் ஒருவன்கூட பூமியில் இருந்ததில்லை. இயேசு நமக்கான நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்தார். "தேவனை நேசி, பிறனை நேசி" என்ற கருத்தில் இயேசு முழு நியாயப்பிரமாணத்தையே சொல்லிவிட்டார்! "நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்,
அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்." என்று மத்தேயு 5:17-இல் கூறுகிறார்.
"...நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்..."
- எரேமியா 31:33
Strong's Hebrew:
2710. chaqaq - to cut in, inscribe, decree
(mə·ḥō·qə·qê·nū)

யேகோவா காடோஷ்

யேகோவா காடோஷ் / மிக்காதிஷ்கேம்

(Jehovah Kadosh / Mekaddishkem)
பொருள்: பரிசுத்த தேவன் / பரிசுத்தமாக்குகிற கர்த்தர்
(Holy God / The Lord who sanctifies)
"...உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்."
லேவி 19:2
"...என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள், நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்."
லேவி 20:8
எபிரேயத்தில் “qadosh" என்றால் "பரிசுத்தம் / புனிதம்" என்று பொருள். இது தேவனுடைய இயல்பு. சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது.
தேவன் தனக்கென ஒரு கூட்டம், மலை, மொழி, தேசம் மற்றும் பங்கை "பிரித்தெடுத்து" அனைத்தையும் "தனது சொந்தம்" என்று அழைக்கிறார். உதாரணமாக, தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதை "பரிசுத்தமாக்கினார்". தேவனுக்கு சொந்தமான எதையும் பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
தேவனுடன் தனிப்பட்ட உறவைக் கொண்டவர்களாகிய நாம் பிரித்தெடுக்கப்பட்டவர்கள். பரிசுத்தமாக்குதல் என்றால் பாவமில்லாமல் இருப்பது மட்டும் இல்லை. வித்தியாசமாகப் பார்க்கவும், வாழவும், அவருடைய கட்டளைகளின்படி நடந்து கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறோம். நாம் அணியும் உடைகள், பேசும் விதம், கேட்கும் இசை, உண்ணும் உணவு, பார்க்கும் படங்கள் போன்றவை தேவனுடைய பார்வையில் "பரிசுத்தமாக" இருக்க வேண்டும்.
பரிசுத்தம் என்பது ஒரு வெளிப்புறச் செயல் மட்டுமல்ல, அது பரிசுத்த ஆவியானவரின் உள்ளார்ந்த கிரியையின் விளைவாகும். நம்முடைய செயல்களால் நாம் பரிசுத்தமாகிவிடவில்லை, நம்மை பரிசுத்தமாக்குபவராகிய கர்த்தராகிய யேகோவா மிக்காதிஷ்கேம் நம்மை பரிசுத்தமாக்குகிறார்.
"இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்."
- ரோமர் 6:22
Strong's Hebrew:
6918. qadosh - sacred / holy
(mə·qad·diš·ḵem)
6942. qadash - to be set apart / consecrated

யேகோவா மாக்கே

யேகோவா மாக்கே / நாக்கா

(Jehovah Makkeh / Nakah)
பொருள்: சிட்சிக்கும் தேவன் / அடிக்கிறவராகிய தேவன்
(God who smites)
"...உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும், அப்பொழுது அடிக்கிறவராகிய நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்."
எசேக்கியேல் 7:9
பழைய ஏற்பாட்டில், இஸ்ரவேலைத் திருத்துவதற்காக தேவன் தண்டிக்கும் பல நிகழ்வுகளை நாம் தொடர்ந்து பார்க்கிறோம்.
தேவனுடைய இந்த சுபாவம் நிறைய பேருக்கு பிடிக்காத அல்லது பேச விரும்பாத ஒன்று. ஆனால் தேவன் எப்படி இருக்கிறாரோ, அப்படிதான் நாம் அவரை அறிந்துக்கொள்ள வேண்டும். நாம் அவருடைய ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து மறுபக்கத்தை புறக்கணிக்க முடியாது. ஒரு தந்தை தனது மகனை சிறந்த மனிதனாக மாற்றுவதற்காக மட்டுமே தனது மகனின் தவறுகளை சரிசெய்வார். எபிரெயர் 12:6,11 கூறுகிறது,
• "கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்..."
• "எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும். ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்."
எபிரேயர் 12:11
தேவனுடைய கடிந்துகொள்ளுதல் நமக்கு நல்லது, அப்படிப்பட்ட ஒழுக்கம் இருந்தால்தான் அவருடைய பரிசுத்தத்தில் நாம் பங்கு கொள்ளமுடியும்.
தேவன் உங்களைத் திருத்த முயலும்போது ஒருபோதும் அவரைக் கைவிடவோ, கோபப்படவோ கூடாது. நம் இருதயத்தின் கண்களைத் திறந்து, அவர் வாழ்க்கையில் நமக்குக் கற்பிக்க முயற்சிக்கும் பாடத்தை பொறுமையுடன் கற்றுக்கொள்ள வேண்டும்.
mak·keh
[Strong's Hebrew]
5221. nakah- to smite

ஜீவத்தண்ணீரின் ஊற்று

 "ஜீவத்தண்ணீரின் ஊற்று"

Fountain of Living waters
யோவான் 4-ஆம் அதிகாரத்தில், நண்பகல் நேரத்தில் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க வரும் சமாரிய ஸ்திரீயைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. அவளது கசப்பான கடந்த கால பாவங்களால், மற்ற பெண்களைப் போல அதிகாலையில் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. யாருமே அவளுடன் உரையாட விரும்பவில்லை.
யூதர்கள் சமாரியர்களிடம் பேசாமல் இருந்தபோதிலும் இயேசு தம் வழியிலிருந்து விலகி அவளிடம் பேசினார். அவள் இதயத்தில் இருக்கும் வலியை இயேசு கண்டார். அவள் அமைதியாக இருக்க முயன்றும், தோல்வியடைந்த அவளது ஆத்துமாவின் வறண்ட இடங்களை அவரால் பார்க்க முடிந்தது. அவள் இதயத்தை உலகம் தரும் காரியங்களால் நிரப்ப முயற்சிப்பதை அவரால் பார்க்க முடிந்தது.
பின்பு அந்த ஸ்திரீ அவரை நோக்கி: "கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார்" என்றாள். அதற்கு இயேசு: "உன்னுடனே பேசுகிற நானே அவர்" என்றார்.
அவள் உடனடியாக தனது தண்ணீர் குடத்தை விட்டுவிட்டு, தன் நகரத்தாரிடம் ஓடி சுவசேஷத்தை அறிவித்தாள். அந்நாளில் பலர் அவர் மீது நம்பிக்கை வைத்தனர்.
தேவன் சமாரியாவில் உள்ள பெண்களில் ஒதுக்கி வைக்கப்பட்டவளைத் தேர்ந்தெடுத்தார். அவள் மூலம் பல ஆத்துமாக்கள் காப்பாற்றப்பட்டன. அந்தப் பெண் ஒரு கிணற்றில் இருக்கும் தண்ணீரைத்தான் தேடி வந்தாள், ஆனால் இயேசு ஜீவத்தண்ணீரையே வழங்கினார். தேங்கி நிற்கும் கிணற்று நீரை விட, அசைந்து, கூழாங்கற்களின் மேல் விழுந்து, நகர்ந்து, ஓடிவரும் ஜீவத்தண்ணீர் சிறந்தது. அதேப்போல், மதத்தை பின்பற்றுவதைவிட தேவனோடு நாம் வைக்கும் உறவே சிறந்தது. இன்று உங்கள் கிணற்றில் தேவன் உங்களைச் சந்திப்பார் என்று விசுவாசிக்கிறேன். தேவன் யார், நீங்கள் அவருக்கு யார் என்ற சத்தியத்தை அறிந்து, உங்கள் தண்ணீர் குடத்தை அங்கேயே விட்டுவிட்டு மற்றவர்களுக்கு தேவனைப்பற்றி சொல்லும் அளவுக்கு ஆழமான, தனிப்பட்ட முறையில் நீங்கள் அவருடன் உறவாட தீர்மானியுங்கள்!
"வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்."
யோவான் 7:38
[Maqowr Chay Mayim: மகோர் சய் மயிம்]

Thursday, August 1, 2024

யேகோவா கோசி

யேகோவா கோசி

Jehovah Kosi
பொருள்: "கர்த்தரே என் பாத்திரம்"
The Lord is my cup
"கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்..." -சங்கீதம் 16:5
வேதத்தில் "பாத்திரம்" என்ற வார்த்தையை அடிக்கடி சங்கீதங்களில் பார்க்கிறோம்.
ஆங்கிலத்தில் 'Cup' (கப்) என்று எழுதப்பட்டிருக்கும். Coffee Cup அல்ல, இது தண்ணீர் அல்லது திராட்சை ரசம் குடிக்கக்கூடிய ஒரு பாத்திரம். கர்த்தருடைய கோபம், ஆசீர்வாதம், பந்தி போன்ற விஷயங்களைக் குறிக்க குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது.
"பாத்திரம்" ஒரு நபரின் வாழ்க்கையின் விதியை பிரதிபலிக்கிறது. தேவன் அவர்களுக்காக வைத்திருக்கும் நோக்கத்தை / திட்டத்தை குறிக்கிறது.
தேவன் எல்லோருக்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறார். வாழ்க்கை என்பது ஒரு நாடகம் போன்றது, அதில் நாம் இயக்குனரால் கொடுக்கப்பட்ட எந்த பாத்திரத்திலும் நடிக்க வேண்டும்! தேவன் நமக்கு எதை வழங்குகிறாரோ அதையே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரை நேசிப்பவர்களுக்கு அது ஆசீர்வாதத்தால் நிறைந்துள்ளது. பொல்லாதவர்களுக்கு அது கோபமும் நியாயத்தீர்ப்பும் நிறைந்தது. இயேசு தம்முடைய மாம்சத்தை புசிக்கவும் அவருடைய இரத்தத்தை பானம்பண்ணும்படியும் சொன்னார். இயேசுவே நம்முடைய சுதந்தரம் (மாம்சம்) மற்றும் நம் பாத்திரம் (இரத்தம்).
"என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்."
மத்தேயு 26:39
இயேசு பிதாவின் சித்தத்திற்கு முழுமையாக சமர்ப்பித்தார். இன்பமோ, துன்பமோ, நிறைவோ, குறைவோ, கர்த்தருடைய பாத்திரத்தையே எதிர்ப்பார்த்து காத்திருப்போம்!

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...