Wednesday, April 17, 2024

சபைக்குத் தலையானவர்

 சபைக்குத் தலையானவர்

Greek: kephalē tēs ekklēsias
"கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான். அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்."
எபேசியர் 5:23
சபையின் போதகர் (Pastor) அல்ல, ஆராதனைத் தலைவர் அல்ல, மூப்பர்கள் அல்ல, இயேசுவே "சபைக்குத் தலையானவர்".
"அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர். எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்."
(கொலோசெயர் 1:18)
சபையின் தலைவர்கள் பிரதான தலைமைத்துவத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் ஒப்படைக்க வேண்டும். தேவாலயத்தின் போதனைகள் மற்றும் நடைமுறைகளை வழிநடத்துபவர் மற்றும் தீர்மானிப்பவர் இயேசுவாக இருக்கவேண்டும். சபை உறுப்பினர்கள் முதலாவதாக கிறிஸ்துவைத்தான் பின்பற்ற வேண்டும். (பூமிக்குரிய தலைவர்களை இரண்டாவதாக பின்பற்றலாம்.)
தேவாலயம் ஒரு கட்டிடமோ அல்லது ஒரு அமைப்போ அல்ல. அது இயேசுவை அறிந்து, அவரை ஆராதிக்கும் மக்களின் சங்கம்.
மற்ற விசுவாசிகளுடனான வழக்கமான ஐக்கியம், நம்மை தேவனுடைய கட்டளைகளை இன்னும் நன்றாகக் கடைப்பிடிக்க வைக்கிறது, தனிப்பட்ட முறையில் நம்மை விசுவாசிகளாக ஊக்குவிக்கிறது, மற்றவர்களை ஊக்குவிக்கவும் சேவை செய்யவும் அனுமதிக்கிறது.
மத்தேயு 16:18 இல், இயேசு "என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை." என்றார். மணவாட்டியாகிய சபை அவருக்கே சொந்தமானது. தேவாலயத்தை நேர்த்தியாக வழிநடத்தி அதை நேசிக்கும் ஆற்றல் கொண்ட ஒரே ஒருவர் இயேசு கிறிஸ்து மட்டுமே!

கர்த்தருடைய கரம் / விரல் என்னப்பட்டவர்

 "கர்த்தருடைய கரம் / விரல்" என்னப்பட்டவர்

("yad" yahweh)
வசனம்: "ஆவி என்னை உயர எடுத்துக்கொண்டது, நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்துபோனேன், ஆனாலும் கர்த்தருடைய கரம் என்மேல் பலமாக இருந்தது."
எசேக்கியேல் 3:14
பரிசுத்த ஆவியானவர் பெரும்பாலும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளால் "தேவனுடைய கரம்" என்று அடையாளப்பூர்வமாகக் குறிக்கப்படுகிறார் (The 10th letter of Hebrew - 'yod'). "கரம்" என்பது திசை, அறிவுறுத்தல், உதவி மற்றும் ஆறுதல் ஆகியவற்றைக் குறிக்கிறது. பரிசுத்த ஆவியானவர் மெய்யான உதவியாளர், நம்முடைய ஆசிரியர் மற்றும் நமக்கு ஆறுதல் அளிப்பவர். மேலும், கரம்/கை என்பது திறமை, வல்லமை, கட்டுப்பாடு மற்றும் தொடுதல் ஆகியவற்றைக் குறிக்கும். இந்த வார்த்தைகள் அனைத்தும் தேவனுடைய கிரியைகளை துல்லியமாக விவரிக்கின்றன.
"வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது."
சங்கீதம் 19:1
ஆதியாகமம் 1 தேவன் பூமியை சிருஷ்டித்த நாட்களைப் பற்றி பேசுகிறது. அவர் வெளிச்சம், வானம், சமுத்திரம், வெட்டாந்தரை, செடி கொடி மரங்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பல்வேறு பறவைகள், மீன்கள் மற்றும் விலங்குகளை தன் வார்த்தையால் உருவாக்கினார். பூமி “ஒழுங்கின்மையும் வெறுமையுமாய்" இல்லாதவுடன், அவர் தனது மிகப்பெரிய படைப்பை உருவாக்கினார் - - - பூமியில் உள்ள மண்ணையும் பயன்படுத்தி தன் கைகளால் (பரிசுத்த ஆவியானவர்) மனிதனை சிருஷ்டித்தார். பூமியின் உயிரினங்கள் தேவனுடைய கைவண்ணத்தின் எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை வழங்குகின்றன, அவை யாவும் மிக உயர்ந்த வடிவமைப்பை வெளிப்படுத்துகின்றன.
"நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே."
லூக்கா 11:20
மத்தேயு 12:28 இல் உள்ளதைப் போல “தேவனுடைய ஆவி” என்று எழுதுவதற்குப் பதிலாக, இந்த வசனத்தில் "தேவனுடைய விரல்" என்று லூக்கா எழுதுகிறார்.
பத்து கட்டளைகள் தேவனுடைய வரல்களால் எழுதப்பட்டவை என்று மோசே கூறுகிறார். ஒவ்வொரு கட்டளைக்கும் தேவனுடைய ஒவ்வொரு விரலையும் நினைவில் வைத்துக் கொள்வோம்.

தேவனுடைய ஈவு

 தேவனுடைய ஈவு

(கிரேக்கம்: dōrean tou Theou)
வசனம்: "இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்."
-யோவான் 4:10
ஈவு என்பது ஒரு நபர் மற்றொருவருக்கு கொடுக்கும் பரிசு / நன்கொடை. தேவன் எப்போதும் அன்பின் மிகுதியால் மனித இனத்திற்கு பரிசுகளை வழங்கிக்கொண்டே இருக்கிறார்.
"...அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்."
மத்தேயு 5:45
அதற்கு பதிலாக தேவன் நம்மிடம் எதையும் கேட்பதில்லை.
இந்தியர்கள் "மொய்" என்று அழைக்கும் வழக்கத்தின்படி அதே மதிப்பை எதிர்பார்த்து பரிசளிப்பவர் அல்ல! தேவனுடைய பரிசுகள் இலவசமானவை, அவற்றை ஒருபோதும் அவர் விற்பதில்லை.
மனித இனத்திற்கு தேவனின் மிகப்பெரிய ஈவு அவரது ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்து.
இயேசு தேவனுடைய குமாரனாக பரலோகத்தில் தனது சிங்காசனத்தை விட்டுவிட்டு, பூமியில் ஒரு தாழ்மையான மனிதரனாக வாழ்ந்தார் – அவர் மிகவும் தாராளமான ஒரு நபராக மாறினார். அவர் ஒரு மனிதனாக வந்தது மட்டுமல்லாமல், நமக்காக மறித்தார், மேலும் அவர் – ராஜாவாக திரும்பி வரும்போது அவருடன் ஆட்சி செய்யும் வாய்ப்பையும் நமக்குத் தருகிறார். இந்த ஈவு இணைற்றது.
இந்த ஒரு வரம் மூலம் அதனுடன் வரும் பிற வரங்களையும் நாம் பெறுகிறோம்:
• பரிசுத்த ஆவியானவரின் வரம்
• நித்திய ஜீவனின் வரம்
• இரட்சிப்பின் வரம்
• நீதியின் வரம்
"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."
யோவான் 3:16

காலெ ரசின்

காலெ ரசின்

Galeh Razin


பொருள்: மறைப்பொருள்களை வெளிப்படுத்துபவர்
(Revealer of secrets)
வசனம்: "ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால், மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்குத் தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான்."
- தானியேல் 2:47
பாபிலோனில் வேறு எந்த மந்திரவாதியாலும் ஞானியாலும் கண்டுபிடிக்க முடியாத நேபுகாத்நேச்சார் ராஜாவின் கனவை தேவன் தானியேலுக்கு வெளிப்படுத்தினார். அதனால்தான் அவர் தேவனை, "மறைப்பொருள்களை வெளிப்படுத்துபவர்" என்று அழைத்தார்.
"காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை: காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை."
- நீதிமொழிகள் 25:2
அனைவருக்கும் ரகசியங்கள் உண்டு. அது தங்களுக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைகின்றார்கள். உண்மையில், உலகில் எந்த ரகசியமும் இல்லை, ஏனென்றால் முழு பிரபஞ்சத்திலும் நடக்கும் அனைத்தையும் தேவன் அறிவார்.
தாவீது பத்சேபாளுடன் பாவம் செய்தார், பின்னர் யோவாபுக்கு கட்டளையிட்டு உரியாவைக் கொன்றார். இது பற்றி வேறு யாருக்கும் தெரியாது என்று அவர் நினைத்தார். ஆனால் தேவன் அதை தனது தீர்க்கதரிசி நாத்தானுக்கு வெளிப்படுத்தினார், அவர் பின்னர் தாவீது ராஜாவைக் கடிந்துக்கொண்டார்.
நம் தேவன் அனைத்தையும் அறிந்தவர். அவரிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது. இருளில் எது நடந்தாலும் அது வெளிச்சத்திற்கு ஒருநாள் வெளிவரும்.
அனனியாவும் அவரது மனைவி சப்பீராளும் செய்ததை பரிசுத்த ஆவியானவர் மூலம் கர்த்தர் பேதுருவுக்கு வெளிப்படுத்தினார். நாம் கர்த்தருக்குள் நடக்கும்போது, அவர் பொய்களையும் உண்மையையும் நமக்கு வெளிப்படுத்துகிறார்.
"மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள், வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்"
- உபாகமம் 29:29

Monday, April 8, 2024

ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன்

 "ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன்"

Friend of Tax Collectors and Sinners
வசனம்: "மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார், அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள்."
மத்தேயு 11:19
பரிசேயர்கள் வெறுத்த ஆயக்காரருக்கு (சகேயு மற்றும் மத்தேயு போன்றவர்கள்) இயேசு நண்பராக இருந்தார். இயேசு அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். தவறான நபர்களுடன் இயேசு தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருப்பதாகவும், அவரை "பாவிகளின் சிநேகிதன்" என்றும் யூதர்கள் அழைத்தனர்.
உண்மையில் அவர் பாவிகளுக்காகத்தான் வந்தார். நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவை! பரிசேயர்களும் பாவிகளாகத்தான் இருந்தனர், ஆனால் அவர்களை நீதிமான்கள் என்று கருதினர். 'பாவிகளின் நண்பன்' என்று அவர்கள் விமர்சித்தவர் இதுவரை பாவமே செய்திராத சுத்த இருதயமுள்ளவர்!
முரட்டுத்தனமான மற்றும் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடும் குழந்தைகளுடன் தங்கள் குழந்தைகள் நட்பு வைத்துக்கொண்டால், பெரும்பாலான பெற்றோர்கள் அதை விரும்புவதில்லை, ஏனென்றால் அவர்களுடைய பழக்க வழக்கம் தங்கள் குழந்தைகளுக்கும் வந்துவிடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். இயேசு பாவிகளோடு சேர்ந்து பாவம் செய்யவில்லை, அவர்களை இரட்சிக்கவே அவர் அவர்களுடன் இருந்தார்.
கிறிஸ்தவர்களாகிய நாம் சுவிசேஷம் சொல்வதற்கு முன் மக்களுடன் நட்பை உருவாக்க வேண்டும். கிறிஸ்தவரல்லாத சகோதர சகோதரிகளை நேசித்து, நாம் இயேசுவைப் போல நடந்துக்கொள்ளத் தொடங்கும் போது, சில மதவாதிகள் விமர்சிப்பார்கள், எப்போதும் ஏதாவது குறை சொல்லிக்கொண்டு இருப்பார்கள். நாம் அவர்களுக்காக வாழாமல், இயேசு ஒருவருக்கே வாழ்வோம்!
"நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்."
ரோமர் 5:8

நமக்கு முன்னோடினவராகிய இயேசு

 "நமக்கு முன்னோடினவராகிய இயேசு"

கிரேக்கம்: prodromos
ஆங்கிலம்: Forerunner
வசனம்: நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.
-எபிரேயர் 6:20
முன்னோடினவர்” என்றால் ஒருவரின் வளர்ச்சிக்குக் காரணமாகக் கடந்த காலத்தில் இருந்த ஒருவர். "முன்மாதிரி" என்றும் சொல்லலாம்.
ஆங்கிலத்தில் Who is your Role Model? என்று கேட்டால் பலர் பல பிரபலங்களை சொல்வார்கள். கிறிஸ்தவர்களுக்கு எப்போதுமே இயேசுதான் No.1 Role Model!
ஒரு முன்னோடியைப் பின்தொடர்வது என்பது அவர்கள் சென்ற அதே பாதையில் செல்வது.
இயேசு, அவர் தேவக்குமாரன் என்றாலும், மனித சோதனைகளை எதிர்த்துப் போராட தனது தெய்வீக சக்திகளைப் பயன்படுத்தவில்லை. அவர் நம் அனைவரையும் போலவே 100% மனிதனாக இருந்தார். இதனால் நாம் அவரைப் பின்பற்றலாம்.
நமக்கும் பிதாக்கும் இடையே உள்ள திரைச்சீலையை இரண்டாகக் கிழித்து இயேசு ஒரு புதிய வழியை நமக்காகத் திறந்தார். நம் பாவங்களை நீக்கி, மனிதர்கள் தேவனோடு பங்குகொள்வதையும் அவர் சாத்தியமாக்கியுள்ளார்.
இயேசுவிடம் வருவது மட்டும் போதாது, வாழ்க்கை முழுவதும் அவரோடு நடந்து செல்வது மிகவும் முக்கியம். இயேசு வழி வகுத்தது மட்டுமல்லாமல் அன்பு நிறைந்த இதயத்துடன் நம்முடன் வருகிறார்.
பிதாவோடு என்றென்றும் இருக்கும் இடத்திற்கு இயேசு நம்மை அழைத்துச் செல்கிறார்.
இயேசு நமக்கு முன்பாகச் சென்றதால் மட்டுமே நம்மால் அங்கே செல்ல முடியும்! இயேசு முதலில் கதவைத் திறந்து பலியை செலுத்தினதால் மட்டுமே நாமும் அங்கு செல்ல முடியும்! மெல்கிசேதேக்கின் முறைமையின் படி கிறிஸ்து என்றென்றும் பிரதான ஆசாரியராக நமக்காக பரிந்து பேசுவதால் மட்டுமே நாம் உள்ளே செல்ல முடியும்!

உண்மையும் சத்தியமுமுள்ளவர்

உண்மையும் சத்தியமுமுள்ளவர்

English: Faithful and True
Greek: Pistos kai alēthinos
வசனம்: "பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன், இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர், அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்."
வெளி 19:11
“உண்மையும் சத்தியமுமுள்ளவர்” என்ற தலைப்பு இயேசு கிறிஸ்துவின் நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
இந்த வசனம், கடைசி காலத்தின் இறுதியில் கிறிஸ்துவின் தோற்றத்தைக் குறித்து பேசுகிறது. அவர் இனி அமைதியாக, அடக்கமாக ஒரு வேலைக்காரனைப் போல தாழ்மையாக கழுதையின் மீது சவாரி செய்கிறவராக இல்லை. இப்போது அவர் வெற்றி பெற்ற ராஜா, ஒரு வீரனைப் போல பராக்கிரமமாக, தனது சேனைகளை யுத்தத்திற்கு அழைத்துச் செல்கிறார். ஏசாயா தனது வருகையை முன்னறிவித்த நாளிலிருந்து, கிறிஸ்துவின் விசுவாசம் அறியப்பட்டது. அவருடைய ஊழியம் முழுவதும் இயேசு பிதாவிற்கு உண்மையுள்ள மற்றும் கீழ்ப்படிதலுள்ள ஊழியனாக இருந்தார். அவர் அனைவருக்கும் அளித்த வாக்குறுதிகளுக்கு உண்மையாகவே இருந்து வருகிறார், அவர் ஒருபோதும் மாறவில்லை.
வெளிப்படுத்தின விசேஷம் என்ற புத்தகம் கிறிஸ்துவின் மணவாட்டியாகிய சபை விசுவாசமாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்ற அழைப்பாகும், அவர் உண்மையுள்ளவராக இருப்பதுபோல் நாமும் தேவனுக்கும் பிறருக்கும் உண்மையாகவே இருப்போம்.

எஷ் ஒக்லா

எஷ் ஒக்லா

Esh Oklah
பொருள்: பட்சிக்கிற அக்கினி
("Esh" என்றால் நெருப்பு, "okelah" என்றால் "பட்சிக்கிற")
"உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்."
-உபாகமம் 4:24
அக்கினி என்றாலே என் மனதிற்கு வருவது சோதோம் கொமோரா சம்பவம்தான்!
"இதோ, கர்த்தருடைய நாமம் தூரத்திலிருந்து வரும், அவருடைய கோபம் எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருக்கும், அவருடைய உதடுகள் சினத்தால் நிறைந்து, அவருடைய நாவு பட்சிக்கிற அக்கினிபோல இருக்கும்."
ஏசாயா 30:27
நாம் நெருப்பில் எதைப் போட்டாலும் எரித்துவிடும் அல்லது விழுங்கிவிடும். கர்த்தர் ஏன் எரிக்கிறார்? எதை விழுங்குவார்?
பதில் யாத்திராகமம் 34:14-16 இல் உள்ளது
"கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்."
எபிரேயர்களுக்கு எழுதின நிரூபத்தில், பவுல் எபிரேயர்களை கர்த்தராகிய தேவனை பயபக்தியுடன் ஆராதனை செய்யும்படி எச்சரிக்கிறார். (எபி 12:29)
ஆரோனின் குமாரர்களாகிய நாதாபும் அபியூவும் தேவனுடைய சந்நிதியில் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்தபோது தேவனுடைய அக்கினியால் அழிக்கப்பட்டனர். (லேவி 10:2)
எலியாவின் சரித்திரத்திலும் ஏசாயா புத்தகத்திலும் தேவனுடைய அக்கினி மக்களை எரிப்பதையும் நாம் காணலாம். தேவனுடைய அக்கினி பரிசுத்தமற்ற எதையும் எரிக்கிறது.
நாம் தேவனை ஆராதிக்கும்போது, நாம் அதை விருப்பமில்லாமல் அல்லது அரை மனதுடன் செய்யக்கூடாது. நாம் அவரை முறையாகவும் பயபக்தியுடனும் வணங்க வேண்டும்.
".. அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்.."
யோவான் 4:24

யேகோவா இம்மேகா

யேகோவா இம்மேகா

பொருள்: "என்னோடு இருக்கும் தேவன்"

ஏசாயா 7:14 இல் கூறப்பட்டுள்ள "இம்மானுவேல்" என்பது பொதுவாக தம் மக்களுடன் தேவன் இருப்பதைக் குறிக்கும் நாமம். இது இஸ்ரவேலர்களுக்கு புதிது அல்ல. தேவன் அவர்கள் மத்தியில் மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருந்தார் ("ஷெக்கினா"). அவர் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுடன் இருந்தார். அவருடைய பிரசன்னத்தில் மோசே, யோசுவா, தாவீது, சாலமோன் மற்றும் பலர் பிரவேசித்தனர்.
அவர்களுடன் இருந்த தேவன் இன்று நம்முடனும் இருக்கிறார்.
"நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை."
-யோசுவா 1:5
தேவ தூதனானவர் கிதியோனிடம் "பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்" என்றார்.
(நியாயாதிபதிகள் 6:12)
இந்த இடத்தில் "இம்மேகா" என்று எழுதப்பட்டுள்ளது. "யேகோவா இம்மேகா" என்பது தேவன் உங்களுடன் தனிப்பட்ட உறவில் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு கிறிஸ்தவன் தேவன் யார் என்பதை ஆவியானவரின் வெளிப்படுத்தல் மூலமாக, தனிப்பட்ட ரீதியில் தெரிந்திருக்க வேண்டும்.
'இம்மேகா'விற்கும் இம்மானுவேலுக்கும் வித்தியாசம் உள்ளது: இம்மானுவேல் என்றால் 'தேவன் நம்முடன் இருக்கிறார்';
"இம்மேகா" என்றால் 'தேவன் என்னுடன் இருக்கிறார்'. கோலியாத்தை எதிர்கொண்ட தாவீது, "கரடிகள் மற்றும் சிங்கங்களிலிருந்து அவரை விடுவிக்கக்கூடிய தேவன்" தன்னையும் விடுவிக்க முடியும் என்பதை அறிந்திருந்தார்: தாவீதுக்கு ஒரு "இம்மேகா வெளிப்பாடு" இருந்ததால்தான் அவர் சவுலின் கவசத்தை மறுத்தார். தேவனின் தனிப்பட்ட வெளிப்பாடு உங்களுக்கும் தேவை! அதுவே உங்கள் அசையா நம்பிக்கை நங்கூரமாக இருக்கட்டும்! ஆமேன்.

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...