Thursday, February 29, 2024

ஏல் பெத்தேல்

பொருள்: "தேவனுடைய வீட்டின் தேவன்"

("ஏல்" - தேவன்; "பெய்ட்" - வீடு)
ஆதியாகமம் 12:8 இல் ஆபிராம் ஆயி பட்டணத்திற்கு அருகில் ஒரு இடத்தில் தனது கூடாரத்தைப் போட்டார். பின்னர் ஆதியாகமம் 28:12 இல், யாக்கோபு அதே இடத்தில் ஒரு சொப்பனத்தில் வானத்திற்கு ஏறும் ஒரு ஏணியைக் கண்டார். தேவன் நிச்சயமாக இந்த இடத்தில் இருக்கிறார் என்று சொல்லி, அதற்கு "பெத்தேல்" என்று பெயரிட்டார். இதன் பழைய பெயர் லூஸ். தற்போது 'பெய்டின்' என்று அழைக்கப்படுகிறது. இது பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைக்கு அருகில் அமைந்துள்ளது.
ஆபிரகாம், ஈசாக்கைப் போல யாக்கோபு தேவனை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை. தேவன் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு வரையருக்கப்பட்டவர் என்று எண்ணினார். இருப்பினும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதியாகமம் 35:1 இல், பெத்தேலில் ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி தேவன் யாக்கோபிடம் கேட்பதைக் காண்கிறோம். கர்த்தர் ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி கட்டளையிடுவது இங்கு மட்டுமே.
"அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான்."
ஆதியாகமம் 35:7
தேவன் மற்ற விக்கிரகங்களைப் போல ஒரு இடத்திற்கு வரையறுக்கப்பட்டவரில்லை என்பதை யாக்கோபு உணர்ந்தார். அவர் அந்த இடத்தை "ஏல் பெத்தேல்" என்று மறுபெயரிடுகிறார். யாக்கோபைத் தவிர வேறு யாரும் தேவனை "ஏல் பெத்தேல்" என்று அழைக்கவில்லை. இது தேவனுடனான அவரது தனிப்பட்ட உறவைப் பிரதிபலிக்கிறது. இது யாக்கோபு தேவனுக்கு வழங்கிய மிகவும் தனிப்பட்ட நாமம்.
நீங்கள் ஜெபத்திலும் தியானத்திலும் நேரத்தைச் செலவிடும்போது, உங்களைக் காப்பாற்றிய கர்த்தர் உங்களுக்காக இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் உங்களுடன் தனிப்பட்ட முறையில் உறவாட விரும்புகிறார். உங்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவார். ஆமேன்.




ஏல் பேரீத்

 பொருள்: உடன்படிக்கையின் தேவன்

“பேரீத்” என்ற வார்த்தைக்கு உடன்படிக்கை அல்லது விருத்தசேதனம் என்று பொருள்.
உடன்படிக்கை என்பது இரு தரப்பினருக்கு இடையிலான ஒரு ஒப்பந்தம்.
தேவன் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் பலருடன் உடன்படிக்கைகளை செய்துள்ளார். அவை நிபந்தனையுடனோ அல்லது இல்லாமலோ இருக்கும்.
நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயத்திற்குப் பிறகு பூமியின் அனைத்து மாம்சங்களோடும் அவர் செய்த முதல் உடன்படிக்கையின் அடையாளமான வானவில் என் நினைவிற்கு வருகிறது.
"ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்."
ஆதியாகமம் 6:18
கிதியோனின் மரணத்திற்குப் பிறகு நியாயாதிபதிகள் 9:46 இல் கூறப்படும் "பேரீத்" பாகாலைக் குறிக்கிறது. சீகேமில் அதன் வழிபாட்டாளர்களை அதனால் காப்பாற்ற முடியவில்லை. இந்த பொய்யான தெய்வத்தை வழிபட்டவர்கள் சிக்கித் தவித்தனர்.
ஆனால் நம் தேவன், ஏல் பேரீத், உடன்படிக்கையின் தேவன். அவருடைய ஜனங்களோடு அவர் செய்த உடன்படிக்கை என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை நாம் அறிந்திருப்பதால் இந்தப் பெயரை நாம் உரிமைக்கோரலாம். கடினமான காலங்கள் வந்து போகின்றன, ஆனால் தேவனின் வாக்குகள் என்றென்றும் உள்ளவை.
"நான் சர்வவல்லமையுள்ள தேவன். நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்."
ஆதியாகமம் 17:1,2



சகல ஜாதிகளாலும் விரும்பப் பட்டவர்

"சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப் பட்டவர் வருவார். இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." - ஆகாய் 2:7

"எல்லா ஜாதிகளாலும் மிகவும் விரும்பத்தக்கவர் இயேசு கிறிஸ்து. அது கிறிஸ்தவ திருச்சபையின் மகிமை." – சி.எச். ஸ்பர்ஜன்
இயேசுவை அறிந்தாலும் அறியாவிட்டாலும் எல்லா ஜாதிகளின் விருப்பமும் இயேசுவே. "சில" ஜாதிகள் அல்ல, அவர் "சகல" ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர்.
ராஜ்யம் கர்த்தருடையது, அவரே தேசங்களை ஆளுகிறார். அவருடைய முதலாம் வருகை இருண்ட வானத்தை ஒளிரச் செய்தது. அரசர்கள் அவரைத் தேடினார்கள். கொடுங்கோலர்கள் அவரது பிறப்பால் அச்சுறுத்தப்பட்டார்கள். தேவதூதர்கள் அவருடைய பறப்பை அறிவித்தனர்.
"அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று. இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தஞ் செய்திருக்கிறார்." - எபிரேயர் 12:26
அதைத்தான் தேவன் நம் நாட்களில் செய்துகொண்டிருக்கிறார். அவர் மெய்யாகவே தேசங்களை அசைக்கிறார். உலகம் கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாக இருக்கும். கிறிஸ்துவின் முதல் வருகை நடந்தது போல, தேவன் அவர் வாக்குறுதியளித்தபடி எல்லாவற்றையும் ஆயத்தம் செய்தவுடன் பூமிக்கு அவர் திரும்புவார்.



உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம்

 "அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான். - லூக்கா 1:78,79

சூரியன் அடிவானத்தில் தெரிவதற்கு முன் வானில் சூரியனின் கதிர்கள் பரவ ஆரம்பிப்பதுதான் அருணோதயம் எனப்படுகிறது.
இது வாக்குறுதியளிக்கப்பட்ட மேசியாவாகிய இயேசுவின் உருவகம். இந்த வசனம் சகரியா தனது மகன் யோவான் பிறந்தபோது சொன்ன ஒரு தீர்க்கதரிசனம். ஆறு மாதங்களுக்குப் பிறகு, நீதியின் சூரியனாக இயேசு கிறிஸ்து பிறந்தார்.
இங்குள்ள கிரேக்க வார்த்தையான "அனடோல்" இங்கு ஒரு முறை மட்டுமே “அருணோதயம்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது பொதுவாக “கிழக்கு” என மொழிபெயர்க்கப்படுகிறது. கிழக்கில் நட்சத்திரத்தைப் பார்த்த சாஸ்த்திரிகளின் கதையில் இது மூன்று முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
"...பெத்லகேமில் இயேசு பிறந்தபோது கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்."
மத்தேயு 2:1,2
இயேசு நீதியின் சூரியன் என்று குறிப்பிடப்படுகிறார். அவருடைய நற்செய்தி இருளடைந்த உலகத்திற்கு ஒளி. பல நாட்களாக சூரிய உதயத்தைக் காணாத சில பகுதிகள் உலகில் உள்ளன. ஆனால் சூரிய உதயத்தைப் பார்க்கும் நாளில், மக்கள் மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு கொண்டாடுகிறார்கள். அதேபோல், இயேசு நம் வாழ்வின் சூரியன். நாம் அவரை தினமும் பார்க்கவில்லை என்றால், இருள் நம் வாழ்க்கையில் சூழும். தினமும் அவரை தியானித்து நம் நாட்களைத் தொடங்குவோம்.




பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்

"என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர், பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்." - உன்னதப்பாட்டு 5:10

நம்முடைய கர்த்தராகிய இயேசு பல கோடிகளில் சிறந்தவர் என்று சொன்னால் கூட மிகையாகாது. அவர் மட்டுமே சிறந்தவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இந்த வசனத்தின் அர்த்தம் என்ன?
ஒரு நபர் தன் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான மக்களை சந்திக்கிறார். நமக்கு முகநூலில் 5000 நண்பர்கள் இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் followers இருந்தாலும், நமக்கென்று ஒரு நெருக்கமான வட்டம் உள்ளது, அது 100 க்கு மேல் இருக்காது.
இந்த வசனத்தில், சூளமித்தி தான் சந்தித்த அநேகரை விட தன் நேசர் சிறந்தவர் என்று கூறுகிறாள்.
"தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல, மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல" என்று இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொன்னார்.
[மத்தேயு 10:37]
தேவனுடைய ஞானத்தையோ, நம் மீதான அவருடைய அன்பையோ, அவருடைய கிருபை நிறைந்த ஈவுகளையோ யாரோடும் ஒப்பிட முடியாது.
“என் வாழ்க்கையில், இயேசு பதினாயிரங்களில் சிறந்தவரா?” என்று ஒவ்வொரு கிறிஸ்தவரும் தன்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும்.




இயேசு: ஒரு கட்டிட அமைப்பாளர்

 மாற்கு 6:3 இல் நாசரேத்தின் மக்கள் இயேசுவைப் பற்றி பேசுவதைக் காணலாம்: "இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா?...என்று சொல்லி, அவரைக் குறித்து இடறலடைந்தார்கள்". - மாற்கு 6:3

"தச்சன்" என்ற வார்த்தை "டெக்டான்" என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.
'டெக்டான்' என்பது ஒரு தச்சரைக் குறிக்கும், ஆனால் அதற்கு சமமாக ஒரு கட்டிட அமைப்பாளரையும் குறிக்கும்.
அனைத்து சுவிசேஷங்களிலும் இயேசு தனது பிரசங்களில் கட்டிடங்களை தொடர்ந்து பயன்படுத்துவதை காணமுடிகிறது. (மர வேலைப்பாடுகளைக்குறித்து ஒரு முறைக்கூட பேசினதில்லை!)
கீழே விழுந்த கோபுரம் பற்றிய அவரது கருத்து (லூக்கா 13:4), ஒரு களஞ்சியத்தை கட்டிய பணக்காரரின் கதை (லூக்கா 12:16-21), ஒரு வேலியைக் கட்டிய திராட்சைத் தோட்ட உரிமையாளர் (மத்தேயு 21:33), ஒரு கோபுரம் கட்ட விரும்பும் நபர் (லூக்கா 14:28-30), மணலுக்கு மாறாக கன்மலையில் தனது வீட்டைக் கட்டியவன் (மத்தேயு 7:24-27)...
சுவிசேஷ புத்தகங்களில் இயேசு மற்ற எந்த ஒரு செயலையும் விட கட்டிடத்தின் அடிப்படையில் உவமைகளைப் பயன்படுத்தியதற்கான கூடுதல் எடுத்துக்காட்டுகள் உள்ளன. அநேகமாக இயேசுவும் அவருடைய தந்தை யோசேப்பும் கட்டிட அமைப்பாளர்களாகத்தான் இருந்திருக்கக்கூடும்.
அந்த நாட்களில் நாசரேத்து நகரத்தில் அதிக மரங்கள் இல்லை. அது ஏரோது ஆன்டிபாஸின் மிகப்பெரிய திட்டமான "செஃபோரிஸ்" என்ற பட்டணத்திலிருந்து 3 மைல் தொலைவில்தான் இருந்தது. யோசேப்பு இங்கு வேலை செய்திருப்பார் என்று அறிஞர்கள் நம்புகின்றனர்.
பரம் ஏறுவதற்கு முன், இயேசு தம்முடைய சீஷர்களிடம் சென்று நமக்காக ஒரு இடத்தைத் தயார் செய்வேன் என்று கூறினார்.
"என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு... ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்."
யோவான் 14:2
அவரே நம் சபையைக் கட்டுபவர்.

இயேசு - நம் பிரதான மூலைக்கல்

"...வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று." - 1 பேதுரு 2:7

"மூலைக்கல்" என்றால் என்ன என்று எப்போதாவது யோசித்து உண்டா?
இது ஒரு கட்டிடத்தின் ஒரு மூலையின் அடிப்பகுதியை உருவாக்கும் ஒரு கல், இரண்டு சுவர்களை அது இணைக்கிறது.
கொத்தனார்கள் ஒரு கட்டிடத்தின் அஸ்திபாரத்தை உயர்த்தும்போது, அவர்கள் பொதுவாக மூலைகளிலிருந்து தொடங்குவார்கள். மூலைகள் கட்டப்பட்டால் மட்டும் தான், மற்ற சுவர்களைக் கட்ட முடியும். இது முழு கட்டமைப்பின் எடையையும் தாங்கியிருக்கும் கல்.
வேதாகமம் இயேசுவை நம் நம்பிக்கையின் "பிரதான மூலைக்கல்" என்று விவரிக்கிறது.
"...இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன், அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான்." என்று ஏசாயா 28:16 இல் எழுதப்பட்டிருக்கும் மூலைக்கல் இயேசு என்று அப்போஸ்தலன் பவுல் அறிந்திருந்தார்.
இயேசு தன் சபையைத் தாங்கும் அளவிற்கு பெரிய மூலைக்கல்லானவர் மட்டுமல்ல, உலகம் முழுவதையும் தாங்கும் அளவிற்கு பெரியவர்.
"ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள். அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார். அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது.
எபேசியர் 2:19-21
இயேசு மட்டுமே நாம் நிற்கும் மூலைக்கல்லாக இருக்கட்டும்!




மணவாளனாகிய இயேசு

 வசனம்: "மணவாட்டியை உடையவனே மணவாளன்: மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்..." - யோவான் 3:29

ஓசியாவின் புத்தகத்தில், தேவன் இஸ்ரவேலின் விக்கிரக ஆராதனையை விபச்சாரத்துடன் ஒப்பிடுகிறார், ஏனெனில் அவர் தனது தேசமான இஸ்ரவேலுடன் திருமண உறவில் தன்னைக் காண்கிறார்.
மணவாட்டியாகிய சபை அந்த மகிழ்ச்சியான நாளுக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவும், சரீரத்தை நிறைவு செய்யும் கடைசி விசுவாசி வரை சேர்த்துக்கொள்ள இயேசு காத்திருக்கிறார்.
"அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்." -மத்தேயு 25:1
மத்தேயு 25:1-13 மணமகனைச் சந்திக்கக் காத்திருக்கும் பத்து கன்னிகைகளைப் பற்றிப் பேசுகிறது. ஐந்து பேர் புத்தியுள்ளவர்கள், அவர்கள் கூடுதலாக எண்ணெய் வைத்திருந்தார்கள். ஆனால் மீதமுள்ள ஐந்து பேர் புத்தி இல்லாதவர்கள். எண்ணெய் தீர்ந்துவிட்டதால் மணமகனுடன் திருமணம் செய்யக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பை இழந்துவிட்டனர்.
இயேசுவை நம்பும் ஒவ்வொருவரும் சபையின் அங்கத்தினராக மாறுகிறார்கள். ஆனால், சபையார் அனைவரும் ஆட்டுக்குட்டியானவரின் கல்யாணத்தில் மணவாட்டியாக இருக்க மாட்டார்கள். எனவே அவருடைய மனைவியாக வேண்டும் என்றால் புத்தியுள்ள கன்னிகைகளைப் போல மணவாளனுடைய வருகைக்காக ஆயத்தமாயிருங்கள்.
"...ஆட்டுக்குட்டியானவரின் கலியாணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்..." வெளி 19:9








பென் ஏலோஹும்

பொருள்: தேவக்குமாரன்

தேவனுக்கும் இயேசுவிற்கும் உள்ள உறவு இந்த பூமியிலுள்ள ஒரு தந்தைக்கும் அவருடைய மகனுக்கும் உள்ள மனித உறவைப்போன்றது அல்ல. பிதா திருமணம் செய்து இயேசுவைப் பெற்றுக்கொள்ளவில்லை. வார்த்தையான தெய்வம், பிதாவின் குமாரனாக மனித வடிவத்தில் வெளிப்படுத்தப்பட்டார் (யோவான் 1:1, 14).
உலக வரலாற்றில், பல மனிதர்கள் தங்களை கடவுளின் மகனாக அல்லது தெய்வத்தின் அவதாரமாக தங்களை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளனர்.
தேவனுடன் ஒரு சிறப்பு உறவைக் கொண்டவர்களைக் குறிக்க இந்த நாமம் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. யாத்திராகமத்தில், இஸ்ரவேல் தேசம் தேவனுடைய "சேஷ்டபுத்திரன்" என்று அழைக்கப்படுகிறது (யாத் 4:22).
தேவதூதர்கள், நீதியுள்ள, பக்தியுள்ள மனிதர்கள் மற்றும் இஸ்ரவேல் ராஜாக்கள் அனைவரும் "தேவனுடைய குமாரர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.
புதிய ஏற்பாட்டில், "தேவனுடைய குமாரன்" என்ற பட்டம் பல சந்தர்ப்பங்களில் இயேசுவிற்குப் பயன்படுத்தப்படுகிறது. இயேசுவே தன்னை இவ்வாறு உரிமையுடன் அடையாளப்படுத்திக்கொண்டதால்தான் யூதர்களால் அவதூறாக விசாரிக்கப்பட்டு குற்றவாளியாகக் கருதப்பட்டார். (யோவான் 19:7)

அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான்.
யோவான் 1:34
யோவான் ஸ்நானகனுக்கு இயேசுவை மரியாள் மற்றும் யோசேப்பின் மகன் என்றுதான் தெரியும். ஆனால் பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் ஞானஸ்நானத்தின் போது அவர் மீது இறங்கியபோது, யோவான் அவரை தேவக்குமாரனாக அடையாளம் கண்டார். அவருடைய சாட்சி தெளிவாக உள்ளது! 'தேவனுடைய குமாரர்களில் ஒருவர்' அல்ல, "இவரே தேவனுடைய குமாரன்" என்று சொல்கிறார்.
அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
மத்தேயு 17:5






கீலேயாத்தின் பிசின் தைலம்

 'கீலேயாத்' என்பது வேதத்தின் காலங்களில் குணப்படுத்தும் தைலங்களுக்கு பெயர் பெற்ற ஒரு ஊர். இது எரேமியா தீர்க்கதரிசியின் பிறப்பிடமாகும். கீலேயாத் தைலம் என்பது அந்த காலத்தில் தூபத்திற்காக, வாசனை திரவியமாக, ராஜாக்களின் அபிஷேகத்திற்காக, மருந்தாக மற்றும் தைலமாக பயன்படுத்தப்பட்ட பிரபலமான ஒரு தாவரத்தைக் குறிக்கிறது. பொதுவாக வேப்ப மரத்தின் காற்றை சுவாசிப்பது மிக ஆரோக்கியமானது என்று நமக்குத் தெரியும். அதேபோல இந்த மரத்தின் காற்றுப் பட்டாலே வியாதிகள் எல்லாம் தீருமாம். அங்கு கிடைக்கும் இனிமையான இந்த செடியைத் தேடி மக்கள் பல மைல்கள் பயணிப்பார்கள். சில வரலாற்றாசிரியர்கள் ஷேபாவின் ராணி இந்த தைலத்தை சாலமோன் ராஜாவுக்கு பரிசாக கொடுத்ததாக கூறுகிறார்கள்.

அந்த காலக்கட்டத்தில் , இஸ்ரவேல் மக்கள் மற்ற தெய்வங்களையும் சிலைகளையும் வழிபட்டு பின்தங்கிய நிலையில் இருந்தனர்.
எரேமியா தன் மக்கள் அழிவை நோக்கி இருந்த நிலைமையை நினைத்து வருத்தப்பட்டார். அவர்கள் ஜீவனுள்ள தேவனிடம் திரும்புவதற்குப் பதிலாக ஆன்மீக ரீதியில் நோய்வாய்ப்பட்டு பாவத்திலிருந்து மனம்திறும்ப மறுத்துவிட்டனர். இந்த வேதனையில், அவர் இவ்வாறு புலம்புகிறார்:
கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்? - எரேமியா 8:22
பேரழிவுகளிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடியவர் இயேசு கிறிஸ்து. அவருக்கு உவமையாக எரேமியா இந்த தைலத்தை ஒப்பிடுகிறார்.
நியாயத்தீர்ப்பு எல்லோர் மேலும் விழுந்திருக்கிறது. நம்மை இரட்சிக்கக்கூடியவர் இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே. அவரே நம் பிசின் தைலம். ஒவ்வொரு வலியையும் அவர் குறைக்கிறார். ஒவ்வொரு துக்கத்தையும் அவர் ஆறுதல்படுத்துகிறார். ஒவ்வொரு பலவீனத்திலும் நம்மை பலப்படுத்துகிறார். இன்று அவர் அளிக்கும் ஆறுதலை நாம் அவரிடமிருந்து பெறுவோம்.



"விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறவர்"

 வசனம்: "ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்." - எபிரேயர் 12:1

தேவன் ஒவ்வொருவருக்கும் விசுவாசத்தை அவர்கள் கிறிஸ்துவுக்குள் மீண்டும் பிறந்தாலும் இல்லாவிட்டாலும் கொடுத்துள்ளார். அவர்கள் தங்கள் பாவத்திலிருந்து மனந்திரும்பவும், இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொள்ளவும் இந்த விசுவாசத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். சிலர் ஏற்றுக்கொள்வார்கள், சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விசுவாசம் இல்லாமல் கர்த்தரை மகிழ்விக்க முடியாது.
ஒரு விசுவாசத்திற்கு முடிவும் துவக்கமும் இருப்பதே பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. ஒருவர் பாவத்திலிருந்து மனந்திரும்பி, இயேசுவை தன் இதயத்தில் ஏற்றுக்கொண்ட பிறகு, "தங்கள் சொந்த நம்பிக்கை" முடிவடைகிறது. இப்போது மீண்டும் பிறந்த விசுவாசி கிறிஸ்துவின் விசுவாசத்தால் வாழ்கிறார்.
"விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது." - ரோமர் 1:17
கிறிஸ்துவே நம்முடைய விசுவாசத்தை உருவாக்கினார். அவர் அதைக் கவனித்து, அதை சீர்ப்படுத்தி, அதைத் தக்க வைத்துக் கொள்வார்.
"கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு."
எபேசியர் 2:8



பரிந்து பேசுகிறவர்

பரிந்து பேசுகிறவர் (ADVOCATE)

“என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்." - 1 யோவான் 2:1

பாவம் என்பது மனிதனின் சுபாவம். மனிதனின் தேவையை உணர்ந்து அதைத் தேவன் அன்பினால் பூர்த்தி செய்திருக்கிறார். நம்முடைய பாவம்தான் நம்மை தேவனுடைய மகிமையை விட்டு விலகச்செய்கிறது. அதனால் கிறிஸ்து நமது வழக்கறிஞராக, நம் பட்சத்தில் இருக்கிறார்.
ஒரு வழக்கறிஞர், நம் உதவிக்கு வரும் ஒரு நபர். நம் வழக்கை ஒரு நீதிபதியிடம் முறையிடுபவர். இயேசு பரலோகத்தின் நீதிமன்றத்தில் நமக்காக வாதாடுபவராய் இருக்கிறார். பிதா தன் குமாரனின் பரிந்துரையை தமது பரிசுத்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக உலகம் தொடங்குவதற்கு முன்பே செய்தார்.
சாத்தான் நம்மைக் குற்றம் சாட்டும்போது, கிறிஸ்து நம்மைப் பிரதிநிதித்துவம் செய்து நம்மைக் காப்பாற்றுகிறார். அவர் நம் வழக்கை விசாரிக்கும் வழக்கறிஞர். அவரது பிறப்பு, வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல் - நமக்காக அவர் செய்த அனைத்து காரியங்களிலும் அவருடைய நீதி வெளிப்படுத்தப்படுகிறது.

[STRONG'S GREEK: 
3875: parakletos: called to one's aid]


அத்தீக் யோம் / எலோஹெய் கெடெம்

 பொருள்: நீண்ட ஆயுசுள்ளவர் / அநாதி தேவன், நித்திய தேவன்

வசனம்: பிதாவைக் குறிக்கும் இந்த நாமம் தானியேல் 7 ஆம் அதிகாரத்தில் மூன்று முறை வருகிறது.
நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது. நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார். அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போலத் துப்புரவாகவும் இருந்தது. அவருடைய சிங்காசனம் அக்கினிஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது.
தானியேல் 7:9
தேவன் அவருடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் காட்சியை தானியேலின் தரிசனத்தில் நாம் காணலாம். அவர் பார்த்ததை வெளிப்படுத்த அற்புதமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்.
தேவன் மனித குலத்தின் சரித்திரம் முழுவதிலும் வாழ்ந்துள்ளார். தேவன் எல்லா நிகழ்வுகளுக்கும் முதல் சாட்சி. அவருக்கு இரண்டாவது சாட்சி தேவையில்லை. அவரது தீர்ப்புகள் எப்போதும் நியாயமானவை. மற்றவர்களின் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. என்ன நடந்தாலும், ஏது நடந்தாலும், தேவன் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவரால் எதையும் கையாள முடியும்.
உங்கள் வாழ்க்கையில் காணப்படும் நிகழ்வுகளால் நீங்கள் கவலைப்படுகிறீர்களா? கடந்த காலத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், நிகழ்காலமோ அல்லது எதிர்காலமோ...தேவன் காண்கின்றார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நம்மால் காண முடியாததை தேவன் காண்கின்றார்.
அநாதி தேவனே உனக்கு அடைக்கலம், அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம், அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.
உபாகமம் 33:27
நம்முடைய நாட்கள் தேவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று விசுவாசித்து வாழ்வோம்!












அடோனாய்

பொருள்: என் ஆண்டவர், என் கர்த்தர்.

வசனம்: 1 சாமுவேல் 24:8ல் தாவீது சவுலை "ராஜாவாகிய என் ஆண்டவனே," என்று குறிப்பிடுகிறார். இது எபிரேய மொழியில் "அடோனாய்" என்று எழுதப்பட்டுள்ளது.
"அடோன்" என்ற வார்த்தைக்கு எபிரேய மொழியில் "எஜமான்" என்று பொருள். "ஆண்டவர்" என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் ஏதோவொரு சக்தி அல்லது அதிகாரம் கொண்டவர் என்று வரையறுக்கிறார்கள். இது முதலில் ஆதியாகமம் 15:2 இல் பயன்படுத்தப்பட்டது. (ஆபிராம் "கர்த்தராகிய ஆண்டவரை" அழைக்கிறார்).
உபாகமம் 10:17 தேவன் ஒரு நீதியுள்ள கர்த்தர் என்பதை உறுதிப்படுத்துகிறது: "உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார், அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல."
அடோனாய் என்பது அதிகாரம் உள்ள ஒருவருக்கு வழங்கப்படும் தலைப்பு. கர்த்தரின் உடன்படிக்கைப் பெயராகிய "யேகோவா" மிகவும் பரிசுத்தமானதால், பிற்காலத்தில் பல யூதர்கள் அதை உச்சரிக்கக்கூட பயந்து அவரை "அடோனாய்" என்று சொல்லத் தொடங்கினர். அடோனாய் என்பது கர்த்தருக்குப் பொருத்தமான பெயர்.
இவ்வுலகில் வரையறுக்கப்பட்ட இடங்களை வைத்திருக்கும் மற்ற எஜமான்கள் இருந்தாலும், கர்த்தரே சர்வ சிருஷ்டிக்கும் ஆண்டவர். அடோனாய்
கர்த்தர் ஒருவரே நம் வாழ்வின் எஜமானராக இருக்கட்டும்!



"யேகோவா"

 பொருள்: இப்பிரபஞ்சத்தின் ஒரே சிருஷ்டிகராகிய தேவன், இஸ்ரவேலின் கர்த்தர்.

"மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா, சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன். ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை" - யாத்திராகமம் 6:2, 3
தேவன் தாமே இப்பெயரை மோசேயிடம் வெளிப்படுத்தினார்.
"மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு" - யாத்திராகமம் 17:15
யூதர்கள் "யேகோவா" என்ற பெயரை மிகவும் பயத்துடன் மதிப்பதால், அதை உச்சரிக்கக்கூட மாட்டார்கள். அதற்கு பதிலாக "அடோனாய்"/"ஹாஷேம்" (The Name) என்று அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் "Tetragrammaton" என்று கூறப்படுகிறது.
"யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர்." - சங்கீதம் 83:17
நம்முடைய தேவனாகிய யேகோவாவைப் பார்க்கிலும் உயர்ந்தவர் ஒருவருமில்லை.










ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...