"பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பம்"
Lily of the Valley
[Hebrew: Shoshannat ha'amaqim
Scientific name: Convallaria
majalis]
"நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்."
உன்னதப்பாட்டு 2:1
பள்ளத்தாக்கின் லீலி எபிரேயத்தில் "ஷொஷன்னாட்-ஹா-அமக்கீம்" ஆகும். இந்த மலர் ஏன் இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது என்று பார்ப்போம்:
• லீலி புஷ்பம் வெள்ளையாக அழகாக இருக்கும். வெண்மை என்பது பரிசுத்தத்தைக் குறிக்கும். இயேசுவுடைய ரூபம் மின்னல்போலவும், அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.
(மத்தேயு 28:3)
"பாவம் அறியாதவர்" என்று அழைக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் தூய்மையை வேறு எந்த மலரைக் கொண்டும் வர்ணிக்கமுடியாது.
• லீலி நல்ல நறுமணம் கொண்ட மலர். எபேசியர் 5:2, கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்தார் என்று கூறுகிறது.
• லீலி எண்ணிக்கையில் அதிகமாக பூ பூக்கும் செடி. ஒரு வேரிலிருந்து ஐம்பது தண்டுகள் வரை வளரலாம். யோவான் 15:5 - ல் இயேசு அவர் திராட்சச்செடி என்றும், நாம் அவரிடத்தில் இருந்தால், நாம் கனிகொடுப்போம் என்றும் கூறுகிறார்.
• லீலி புஷ்பத்திற்கு மருத்துவ குணங்கள் உண்டு. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் பரிகாரி. நம் நோய்கள் அனைத்தையும் குணப்படுத்த வல்லவர். (சங்கீதம் 103:3)
• ஒரு லீலி தாழ்மையைக் குறிக்கும். லீலி, பூக்களில் மேன்மையானது, ஆனால் அதின் தலை கீழ் நோக்கித் தொங்குகிறது. இது தேவக்குமாரன் சிலுவையில் தொங்கும் காட்சியை அடையாளப்படுத்துகிறது.
"அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்." (பிலிப்பியர் 2:6-8).
இயேசு "முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்" என்று தம் விசுவாசிகளை அழைக்கிறார். இயேசுவைப் போலவே பரலோகத்தில் உள்ள நம் பிதாவுக்கு முன்பாக நாம் நிற்க தகுதியுடன் இருக்க முயற்சிப்போம், தாழ்மையுடன் பூமியில் வாழ முயற்சிப்போம்!
No comments:
Post a Comment