யேகோவா பாராக்
Jehovah Barak
ஆசீர்வதிக்கும் தேவன்
எபிரேயத்தில் "Berakah" [பெராக்கா] என்ற வார்த்தைக்கு "ஆசீர்வாதம்" என்று பொருள். நம் தேவன் ஆசிர்வதிக்கும் தேவன். ஆசீர்வாதமும் தேவனும் வெவ்வேறல்ல: தேவனே நம் ஆசீர்வாதம். ஆதியாகமம் 32-இல், யாக்கோபு இரு பரிவாரங்கள் கொண்ட ஐசுவரியவானாக இருந்தபோதிலும், அவர் தேவனுடன் இராமுழுவதும் போராடி, "நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்" என்றான். யாக்கோபு தனக்கு பலவீனங்கள் இருப்பதையும், தேவனுடைய ஆசீர்வாதம் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியாது என்பதையும் அறிந்திருந்தார்.
"கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்."
நீதிமொழிகள் 10:22
பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இன்று பூமிக்குரிய ஆசீர்வாதங்களையே மிகவும் நேசிக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவுடன் இந்த உலகில் வாழ்க்கையை வாழ போராட வேண்டியதில்லை என்றும், எல்லாம் தங்களுக்கு எளிதாகக் கிடைத்துவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால், ஆசீர்வாதமும் வெற்றியும் பெரும் போராட்டங்களை மேற்கொள்வதின் விளைவாகும். ஆசீர்வாதம் என்பது நம் கடின உழைப்பிற்கும் விடாமுயற்சிக்கும் தேவன் நமக்குத் தரும் பரிசு. நாம் எதை விதைக்கிறோமோ, அதையே அறுப்போம்.
உபாகமம் 28 கீழ்ப்படிதலுக்கான ஆசீர்வாதங்களும் கீழ்ப்படியாமைக்கான சாபங்களும் நிறைந்த ஒரு அதிகாரம்.
"நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்."
உபாகமம் 28:2
தேவன் நமக்குக் கொடுக்கும் எல்லாவற்றுக்கும் பராமரிப்பும் கவனமும் தேவைப்படுகிறது. உங்களுக்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு ஆசீர்வாதமும் கூடுதல் பொறுப்புடன் வரும். ஒரு நல்ல உத்தியோகம், பலனளிக்கும் வியாபாரம், இனிமையான திருமண வாழ்க்கை, ஒழுக்கமான குழந்தைகள், அபிஷேகம் நிறைந்த ஊழியம்...எல்லாவற்றுக்கும் கடின உழைப்பு தேவை.
"...எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும், மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்."
லூக்கா 12:48
- ரேமா ஜாய் ஷரத்
[Strong's numbers
Hebrew:
1288. barak - to kneel, bless
1293. berakah - a blessing
Greek:
3107. makarios - happy, blessed, to be envied.]
No comments:
Post a Comment